புதுக்கோட்டை, ஜூலை 14: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே நரிக்குறவர் இன மக்கள் சாதி சான்றிதழ் கேட்டுபோராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள்சத்திரம் மற்றும் காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் ‘இந்து ஆதியன்’ சாதி சான்றிதழ் கேட்டுபலமுறை மனு அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையிலும், மாவட்ட நிர்வாகம் இதுவரை நிறைவேற்றவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைக்கண்டித்து, கலெக்டர் அலுவலகம் அருகே பிஎல்ஏ ரவுண்டானா பகுதியில் நரிக்குறவர் இன மக்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினருடன் இணைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த போராட்டத்தில் நரிக்குறவர் என மக்களுக்கு கல்வி உரிமையை பறிக்காமல், இந்து ஆதியன் ஜாதி சான்றிதழ் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்து ஆதியன் நரிக்குறவர் இன மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை ஒப்படைப்பு ஆவணங்களை உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்து, பட்டா வழங்க வேண்டும், கந்தர்வகோட்டை, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பிடம் இல்லாத நரிக்குறவர் மக்களுக்கு புதிய வீட்டு மனைகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபபரப்பு ஏற்பட்டது.
