6 வயது சிறுமிக்கு டிரைவிங் பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

திருமலை: 6 வயது சிறுமிக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் காவல் சரகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவபவர் திருப்பதி. இவர் நேற்று காரில் முன்சீட்டில் அமர்ந்து கொண்டு, தனது 6 வயது பேத்தியை டிரைவர் சீட்டில் அமர வைத்து கார் ஓட்டுவதற்கு கற்றுக்கொடுத்துள்ளார்.

கந்தம்குடா சாலையில் சென்றபோது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிறுமி கார் ஓட்டி பழகி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் காரை நிறுத்தி, ‘சிறுமிக்கு கார் ஓட்டுவதற்கு கற்றுக்கொடுக்கிறீர்களே, விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு, சிறுவர்கள் கார் ஓட்டுவதே தவறு, மைதானங்களில் கற்றுக்கொடுக்காமல், இப்படி சாலையில் கற்றுக்கொடுக்கிறீர்களே’ என கேள்வி எழுப்பினர்.

அதற்கு எஸ்ஐ திருப்பதி, ‘இது தானியங்கி கார், ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் தனது கட்டுப்பாட்டில்தான் உள்ளது’ என விளக்கம் கொடுத்துள்ளார். இதை பொதுமக்கள் ஏற்க மறுத்ததால் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வைரலாக்கினர்.

இதுகுறித்து தகவலறிந்த நர்சிங்கி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணா விசாரணை நடத்தினர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்.

Related Stories: