தேனி, ஜூலை 13: போடி சர்ச் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (32). இவர் தனியார் நிறுவனத்தில் கள உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதில், முகநூல் மூலமாக ஸ்வேதா என்ற பெண் அறிமுகமாகி, டிஜிட்டல் கோல்டு முதலீடு பற்றி கூறியதாகவும், தங்கத்தில் வர்த்தகம் செய்யுமாறும் இதன் மூலம் 12 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை லாபம் ஈட்டலாம் என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், இதனை நம்பி ஆன்லைன் சேவை மூலம் பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ.29 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார்.
பின்னர், இது மோசடி என தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து முத்துக்குமார் அளித்த புகாரின்பேரில், சைபர் கிரைப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தேனி மாவட்டம் காட் ரோட்டில் அந்த பெண் கூறியதன் அடிப்படையில் நேரில் வந்து, கிஷோர் என்கிற பெயரில் ரூ.5.50 லட்சம் பணத்தை வாங்கிச் சென்றது திருச்சி அருகே உரையூரை சேர்ந்த ஜவுளி வியாபாரி குரு விஷ்ணு (21) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து சைபர் க்ரைம் போலீசார் நேற்று விஷ்ணுவை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்புடையவர்களையும் தேடி வருகின்றனர்.
