பல்லடம், ஜூலை 13: பல்லடம் அருகே பெருந்தொழுவு, கண்டியன்கோவில், காட்டூர் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதியில் வெளியேறிய மான் ஒன்று இரை தேடி பொங்கலூரை அடுத்த காட்டூர்புதூர் பகுதிக்கு வந்தது. இதை கண்ட 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் மானை விரட்டி, விரட்டி கடித்தது. நாய்களிடம் இருந்து தப்பிய மான் அங்கிருந்த விவசாய நிலத்துக்குள் புகுந்தது. இதைக்கண்ட விவசாயிகள் விஜயகுமார், கோகுல் ரவி ஆகியோர் தெருநாய்களை விரட்டியடித்து மானை பத்திரமாக மீட்டு, கயிற்றால் கட்டி வைத்தனர்.இதுகுறித்து திருப்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வனக்காவலர் சதீஷ்குமார் சம்பவ இடத்துக்கு வந்தார். இரை தேடும்போது வழித்தவறி விவசாய நிலத்துக்கு வந்து தெரு நாய்களால் காயமடைந்த 2 வயது மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, புதுக்குளம் வனப்பகுதியில் விடப்பட்டது.
