சின்ன திருத்தம் செய்யுங்கள் சிறப்பான பலன்களை பெறுங்கள்!

நம்முடைய வீட்டின் நடுப்பகுதிக்கு பிரம்ம பாகம் என்று பெயர். அந்தக் காலத்தில் வாசல் முற்றம் என்று வைத்து நான்கு பக்கங்களிலும் தாழ் வாரங்கள் அமைத்து நடுவில் திறப்பு வைத்திருப்பார்கள். நன்கு காற்று வரும். வெளிச்சம் நன்றாக இருக்கும். மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அந்த இடத்தை அசுத்தப்படுத்தக் கூடாது. தேவையில்லாத பொருள்களைப் போட்டு அடைக்கக் கூடாது. இப்பொழுது நாம் சிறிய வீடுகளிலே, அடுக்குமாடி குடியிருப்புகளிலே, குடியிருப்பதால் இது சாத்தியம் இல்லை. ஆனாலும்கூட உங்கள் ஹாலின் நடுப் பகுதியை தடைகள் இல்லாமல் வைத்துக் கொள்ளுங்கள்.

இதுதவிர ஈசானியம் என்று சொல்லப் படுகின்ற வடகிழக்கு திசையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இயன்ற அளவு அந்தப் பகுதியில் ஒரு சின்ன தண்ணீர் தொட்டியோ அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இருப்பது போல் வைத்துக் கொள்ளுங்கள். அந்த இடம் ஈரத்தோடு பசை உள்ளதாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். ஈசானிய ஈரமானது எப்பொழுதும் பணப் புழக்கத்தை பணச்சுழற்சியை அதிகப்படுத்தும். வருமானத்தை அதிகப்படுத்தும். வருமானத்தை நோக்கி பெருக்கக் கூடிய வழியை புத்திக்குத் தரும். இதை எளிமையாகச் செய்யலாம்.

இரண்டாவது விஷயம். சிலர் வீட்டில் எப்பொழுதும் ஏதாவது வேலை ஓயாமல் இருந்து கொண்டே இருக்கும். பணிச்சுமை மிக அதிகமாக இருக்கும். அவர்களே மாற்றி மாற்றி செய்து கொண்டே இருப்பார்கள். ஒரு மணி நேரத்தில் முடிய வேண்டிய வேலை 2 மணி நேரம் நடக்கும். திரும்பத் திரும்ப வேலை செய்ய வேண்டி இருக்கும். இவர்களுக்கு எளிய பரிகாரம் மேற்கு பக்கத்திலே பரண் போன்ற பகுதிகளை அமைத்துக் கொண்டு அங்கே நீங்கள் கனமான பொருட்களை வையுங்கள்.

கிழக்குப் பக்கத்திலே கனமான பொருட்களை வைக்க வேண்டாம். மேல் மாடியிலே மேற்கு தெற்கு பகுதிகள் சற்று உயரமாக இருப்பது போல், குறைந்த பட்சம் ஒரு உயரமான கம்பியையாவது நட்டு வையுங்கள். எக்காரணத்தை முன்னிட்டும் வீட்டை விஸ்தரிக்கும்போது கிழக்குப் பக்கம் மிக உயரமான அறைகளையோ கட்டிடங்களையோ எழுப்ப வேண்டாம்.

மூன்றாவதாக ஒரு வீட்டில் வாஸ்து சம்பந்தப்பட்ட குற்றங்கள் இருந்தால் நீங்கள் சிறிய மீன் தொட்டி வைத்து கண்காணிக்கலாம். எவ்வளவு நன்றாக தண்ணீரை மாற்றினாலும் அதில் உள்ள மீன்கள் சில நேரங்களில் இறந்து விடும். அதைப்போல நம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடிகள் அல்லது தொட்டியில் உள்ள செடிகள் தண்ணீர் ஊற்றினாலும் வாடிப் போகும். வளர்ப்பு பிராணிகள் நோய்வாய்ப்படும். அல்லது இறந்து விடும். இப்படிப்பட்ட சில குற்றங்கள் இருந்தால், நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

நான்காவதாக சில பேர் தங்கள் பூர்வீகச் சொத்தை பாகம் செய்து கொள்வார்கள். குறிப்பாக தந்தையின் வீட்டை பாகம் செய்யும் பொழுது எப்படி பாகம் செய்ய வேண்டும் என்ற முறையை நம்முடைய முன்னோர்கள் சொல்லித் தந்திருக்கிறார்கள். மூத்தவருக்கு மேற்கு அல்லது தெற்கு பாகத்தை வழங்க வேண்டும். இளையவருக்கு கிழக்கு அல்லது வடக்கு பாகத்தை வழங்க வேண்டும். இது அந்த வீட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இருவருடைய பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.

கிருஷ்ணதாஸ்

Related Stories: