லால்குடி: திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த ஆதிகுடி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் 30 அடி ஆழ பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றிலிருந்து நேற்றுமுன்தினம் மாலை கடும் துர்நாற்றம் வீசியது. தகவலறிந்து லால்குடி போலீசார், லால்குடி தீயணைப்பு நிலைய வீரர்களுடன் வந்து பார்வையிட்டனர். கிணற்று அருகே 2 கைலி, 2 டிசர்ட், 2 ஜோடி செருப்புகள், ஒரு செல்போன், அரிவாள், கடப்பாரை இருந்ததும், கிணற்றுக்குள் உடல்கள் தலைகுப்புற கிடந்ததும், அதில் ஒரு உடல் தலையின்றி கிடந்ததும் தெரிய வந்தது.
விசாரணையில், சடலமாக மிதந்தவர்கள் கடலூரை சேர்ந்த ராஜா மகன்கள் வெற்றிமணி(35), வீரமணி(32) என தெரியவந்தது. இதுபற்றி போலீசார் கூறுகையில், சகோதரர்கள் லால்குடி அருகே பச்சாம்பேட்டை கிராமத்தில் தங்கி செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளனர். வெற்றிமணிக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கடலூரில் வசித்து வருகின்றனர். வீரமணியின் மனைவி பிரிந்து சென்றதால் அண்ணனுடன் இருந்து வந்தார்.
அண்ணன், தம்பி இருவரும் கடந்த மே 5ம் தேதி ஊருக்கு செல்வதாக செங்கல் சூளை உரிமையாளரிடம் கூறி விட்டு சென்று உள்ளனர். ஆனால் அவர்கள் ஊருக்கு செல்லவில்லை. அண்ணன், தம்பிக்கு கடன் தொல்லை உள்ளது. கஞ்சா பழக்கமும் இருந்தது. சடலம் கிடந்த தோட்டத்தில் திருட்டுத்தனமாக கஞ்சா விற்கப்படுகிறது. இதனால் கஞ்சா வாங்க வந்தபோது தகராறில் கொலை செய்யப்பட்டார்களா? தற்கொலை செய்தார் களா? என விசாரணை நடக்கிறறது என்றனர்.
* தலையை தேடும் போலீஸ்
கிணற்றில் மீட்கப்பட்ட 2 உடல்களும் அழுகி இருந்ததால் ஒருவரின் தலை மட்டும் பிய்ந்து உள்ளேயே சேற்றில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் மீண்டும் கிணற்றில் இறங்கி தலையை தேடுகின்றனர்.
