ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கில் பல இடங்களில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகளும் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டன. இதனால், கிஷ்வார் மாவட்டத்தில் உள்ள 540 மெகாவாட் குவார் நீர்மின் திட்டப் பகுதிக்கு அருகே பல வாகனங்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தன. மேலும், கிஷ்வார்-டோடா தேசிய நெடுஞ்சாலை (NH-244) மூடப்பட்டது. இந்த பேரிடரால் பல வாகனங்கள் சேறும் சகதியுமாக புதைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கனமழையைத் தொடர்ந்து, குவார் மின் திட்டப் பகுதிக்கு அருகே ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் நிலச்சரிவுப் பொருட்களுக்கு அடியில் சிக்கி பலத்த சேதமடைந்தன.
சம்பவம் நடந்த உடனேயே, இடிபாடுகளை அகற்றவும் வாகனங்களை மீட்கவும் கனரக இயந்திரங்களும் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிஷ்ட்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது அமைந்துள்ள குவார் நீர்மின் திட்டம், அப்பகுதியின் நீர்மின் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டு வரும் 540 மெகாவாட் மின் திட்டமாகும். இந்த நிலச்சரிவால் நீர்மின் திட்டம் பதிப்படைத்துள்ளது.
இதற்கிடையில், NH-244-ன் பிரேம் நகர் பகுதியில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால், கிஷ்வார்–டோடா நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலச்சரிவால் சாலையில் ஏராளமான பாறைத் துண்டுகள் படிந்ததால், அந்த வழி வாகனப் போக்குவரத்திற்கு பாதுகாப்பற்றதாக மாறியது.
நெடுஞ்சாலையைச் சீரமைத்து, விரைவில் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான சீரமைப்புப் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். சாலை பாதுகாப்பானது என அறிவிக்கப்படும் வரை, பாதிக்கப்பட்ட சாலையில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும், அதிகாரிகளால் வழங்கப்படும் போக்குவரத்து ஆலோசனைகளைப் பின்பற்றவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முழுவதும் நிலவும் ஈரமான வானிலைக்கு மத்தியில் இந்தப் புதிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, கனமழையின் போது மக்கள், குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய சரிவுகள், ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு அருகில் வசிப்பவர்கள், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
