எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளாததால் விழாவை புறக்கணித்த தவெக அமைச்சர் உட்கட்சி பூசலால் மதுரை நிகழ்ச்சியில் சலசலப்பு

மதுரை: மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் சொந்த கட்சி எம்எல்ஏக்கள் யாரும் வராததால் அமைச்சர் நிர்மல்குமார் அதிருப்தி அடைந்து, நிகழ்ச்சியை புறக்கணித்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உட்கட்சி பூசலால் இந்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை அரசு ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் வெள்ளி விழா ஆண்டு மலர் வெளியீட்டு நிகழ்ச்சி மதுரை மருத்துவ கல்லூரி ஹாலில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கல்லாணை (மதுரை வடக்கு), கோபிசன் (மதுரை தெற்கு) ஆகியோர் பங்கேற்பதாகவும் அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்தது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டிருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே, அதாவது, காலை 9.50 மணிக்கே அமைச்சர் நிர்மல் குமார் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்துவிட்டார். ஆனால் அங்கு எம்எல்ஏக்கள் இருவரும் வரவில்லை. இருப்பினும் அமைச்சர் வேகமாக நடந்துசென்று மேடையில் ஏறினார். அவரிடம் சங்க நிர்வாகிகள் அருகில் சென்று நிலைமை குறித்து விளக்கினர். சில நிமிடங்களில் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைவரும் வந்துவிடுவர் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், அப்செட் ஆன அமைச்சர் மேடையில் கூட அமரவில்லை. குத்துவிளக்கு கூட ஏற்றாமல் அங்கிருந்து புறப்பட தயாரானார். அப்போது, கட்சி நிர்வாகிகளிடம், `அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் உள்ளது; புறப்படுவோமா’ என கூறியபடி அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பங்கேற்றவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். தவெகவில் நடக்கும் உட்கட்சி பூசலை இந்த சம்பவம் வெளிப்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: