சென்னை: பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் இன்று துவங்கியது. இன்றும், நாளையும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு துவங்கியுள்ள இந்த தேர்வு மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2026 நாள் 13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I 04.07.2026 அதாவது இன்றும், தாள்-II 05.07.2026 நாளையும்அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.
இன்று நடைபெற்று வரும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தாள்-I தேர்வை 222 மையங்களில் 61,386 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில் ஆண் தேர்வர்கள் 12,001, பெண் தேர்வர்கள் 49,385 ஆவர். இதில் 1,321 தேர்வர்கள் மாற்றுத்திறன் கொண்டவர்கள். இம்மாற்றுத்திறனாளிகளில் 126 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர் (Scribe) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான நாளை நடைபெறும் தாள்-II தேவை 613 மையங்களில் 1,67,743 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில் ஆண் தேர்வர்கள் 40,535, பெண் தேர்வர்கள் 1,27,208 ஆவர். இதில் 3,151 தேர்வர்கள் மாற்றுத்திறன் கொண்டவர்கள். இம்மாற்றுத்திறனாளிகளில் 601 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர் (Scribe) நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்வு எழுத வருபவர்கள் தேர்வு அறைக்குள் பெல்ட், ஷூ, ஹை ஹீல்ஸ், டிஜிட்டல் வாட்ச் அணியவும், செல்போன், மைக்ரோபோன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்தவும் தேர்வு வாரியம் தடை விதித்துள்ளது.
