பெருங்குடி கல்லுக்குட்டையில் அரசு நிலம் மீட்பு : ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பால் பரபரப்பு

 

துரைப்பாக்கம், ஜூலை 3: பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் தொழிநுட்ப கல்வி துறைக்கு சொந்தமான அரசு நிலம் உள்ளது. அங்குள்ள சிலர், இந்த நிலத்தை ஆக்கிரமித்து, கட்டிட கழிவுகளை கொட்டி, மனையாக மாற்றி, கால் கிரவுண்ட் நிலம் ரூ.15 லட்சம் வீதம் விற்று வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வருவாய் துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில், நேற்று சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை மீட்டு, வேலி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, அங்கு திரண்ட ஆக்கிரமிப்பாளர்கள், வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி ஊழியர்களை பணி செய்ய விடமால் தடுத்தனர்.

இதையடுத்து, பள்ளிக்கரணை வருவாய் ஆய்வாளர் பவ்யா மற்றும் பெருங்குடி விஏஓ சுகந்தி, மாநகராட்சி இளநிலை பொறியாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றி, வேலி அமைக்க உத்தரவிட்டனர். மேலும், இனிமேல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினால் காவல் நிலையத்தில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

 

Related Stories: