கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி மாணவன் உயிரிழப்பு

 

திருவொற்றியூர், ஜூன் 30: திருவொற்றியூரில் கடலில் குளித்த மாணவன், ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார். ராயபுரம் ஆடுதொட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சந்தோஷ் (18), பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை அருகே உள்ள கடற் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கி சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் தினேஷ் ஆகியோர் கடல்நீரில் மூழ்கினர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் கடலில் நீந்திச் சென்று தினேஷை உயிருடன் மீட்டனர். ஆனால் சந்தோஷ் கடல் அலையில் சிக்கி மாயமானார்.

மீனவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. தகவலறிந்து திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்கள் கடலில் மாயமான பள்ளி மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை சந்தோஷ் உடல் திருச்சினாங்குப்பம் கடற்கரையில் ஒதுங்கியது. திருவொற்றியூர் போலீசார் சந்தோஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: