×

ஊட்டிக்கு செல்பவர்களுக்கு புது சிக்கல் நெட்வொர்க் பிரச்னையால் இ-பாஸ் கிடைக்காமல் தவிப்பு: சுற்றுலா பயணிகள் ஊர் திரும்பும் அவலம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு வருவதற்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் இ-பாஸ் நடைமுறையை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. தற்போது, நீலகிரி மாவட்டத்திற்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே வரலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கல்லாறு, குஞ்சப்பனை, கெத்தை, மசினகுடி, மேல் கூடலூர் ஆகிய 5 சோதனை சாவடிகள் மட்டுமே இ-பாஸ் சோதனை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இந்த 5 சோதனை சாவடிகளில் கல்லாறு தவிர மற்ற அனைத்தும் மாவட்டத்திற்குள் வந்து விடுகிறது.

இதனால், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு பாதி தூரம் வந்த பின்னர், இ-பாஸ் கிடைக்கவில்லை என்றால் திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது ஒரு புறம் இருக்க கெத்தை சோதனை சாவடி அடர்ந்த வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளது. இங்கு பெரும்பாலான செல்போன்களின் நெட்வொர்க் கிடைப்பதில்லை. இதனால், அங்கு வந்து இ-பாஸ் போடுவதற்கு முடியாமல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மசினகுடியிலும் நெட்வொர்க் பிரச்னை உள்ளது. எனவே, ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட எல்லைகளிலேயே இ-பாஸ் சோதனை சாவடிகள் அமைக்க வேண்டும். அனைத்து செல்போன் நெட்வொர்க் உள்ள இடங்களில் மட்டும் சோதனை சாவடிகளை அமைக்க முன் வர வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ஊட்டிக்கு செல்பவர்களுக்கு புது சிக்கல் நெட்வொர்க் பிரச்னையால் இ-பாஸ் கிடைக்காமல் தவிப்பு: சுற்றுலா பயணிகள் ஊர் திரும்பும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Tamil Nadu government ,Nilgiris district ,High Court ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...