×

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை அமராவதி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

*நிரம்பி வரும் ஆண்டான்கோயில் தடுப்பணை

*விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கரூர் : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக அமராவதி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆண்டான்கோயில் தடுப்பணையில் ஒரே நாளில் 1883 கன அடி தண்ணீர் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமைப்பேட்டை அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. அணை முழுக் கொள்ளளவை எட்ட உள்ளதால் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதுமாக அமராவதி ஆற்றில் கடந்த 19ம் தேதி முதல் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த 21ம் தேதி கரூர் நகரை கடந்து திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றில் கலந்து சென்றது.

கரூர் மாநகராட்சியை ஒட்டிய ஆண்டான்கோயில் தடுப்பணைக்கு கடந்த 21ம் தேதி 2184 கன அடி தண்ணீர் வந்த நிலையில் படிப்படியாக குறைய துவங்கியது. நேற்று காலை 306 கன அடி தண்ணீர் வந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 6.30 மணி நிலவரப்படி விநாடிக்கு 2189 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அந்த தண்ணீர் கரூர் நகரை கடந்து திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றில் கலந்து மாயனூர் கதவணையை கடந்து காவிரி ஆற்றில் டெல்டா மாவட்டத்தை நோக்கி செல்கிறது. மாயனூர் கதவணைக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1162 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அவை முழுவதுமாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.அமராவதி அணையிலிருந்து திறக்கப்பட்ட அளவை எட்டிவிடும் என நீர்வள துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

இந்நிலையில், கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் நேற்று 12 மணியளவில் 109.2 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், மேட்டூர் அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்படுகி றது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட யாரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்கள் எடுப்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை அமராவதி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Western Ghats ,Amaravati River ,Andankoil barrage ,Dinakaran ,
× RELATED செங்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்து...