×

வேலூர் அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு அருள்வாக்கு கொடுத்த காளை நள்ளிரவில் களைகட்டிய திருவிழா: 47 கிராம மக்கள் விடிய, விடிய வழிபாடு

ஒடுகத்தூர்: வேலூர் அருகே மலை கிராமத்தில் காளை அருள்வாக்கு கூறியதால், 20 ஆண்டுகளுக்கு பிறகு நள்ளிரவில் பெருமாள் கோயிலில் விடிய, விடிய நடந்த திருவிழாவில் 47 கிராம மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டு 47 குக்கிராமங்கள் உள்ளன. இவற்றில் கட்டியான், அரசன், கோரி, தண்டன், வரடியான், பாவிரன், நாடான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில், ஜமுனாமரத்தூர் மலை கிராமத்தை பூர்வீகமாக கொண்ட மலைவாழ் மக்கள் பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியாபட்டு கிராமத்தில் சுயம்பாக அமைந்துள்ள பெருமாள் வடிவிலான புற்றை தங்களின் முதல் கடவுளாக தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் மற்ற பகுதிகளில் நடத்தப்படும் திருவிழாவை போன்று இல்லை. இங்கு பூஜை செய்யும் நபருக்கும், அவர் கூறும் ஊரில் உள்ள ஏதேனும் ஒரு காளைக்கும் ஒரே நேரத்தில் சாமி வந்து இருவரும் அருள்வாக்கு சொன்னால் மட்டுமே திருவிழா நடக்கும். இல்லையெனில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருவிழா நடக்காது.

அதன்படி, கடந்த 2003ல் திருவிழா நடத்தப்பட்டது. 20 ஆண்டுகள் கழித்து தற்போது திருவிழா நடத்த உத்தரவு கிடைத்துள்ளது. கடந்த 48 நாட்களுக்கு முன் காளைக்கு அருள் வந்து வாக்கு கேட்டு திருவிழா தேதி குறிக்கப்பட்டது. பின்னர், அந்த காளையை 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து 44 பேர் 7 நாட்களாக 47 குக்கிராமங்களுக்கும் நடைபயணமாக சென்று திருவிழா நடத்த காணிக்கை திரட்டப்பட்டது. பின்னர் ஒடுகத்தூர் அடுத்த கட்டியாபட்டு மலை கிராமத்தில் 20 ஆண்டுகள் கழித்து நேற்று முன்தினம் நள்ளிரவில் பெருமாள் கோயில் திருவிழா நடந்தது. முன்னதாக அருள் வந்த காளையை அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். புற்றுக்கு வண்ண மலர்களால் அலங்கரித்து, சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது, 48 நாள் விரதம் இருந்து காப்பு கட்டியவர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். காளைக்கு படையலிட்டு அதனிடம் மலைவாழ் மக்கள் வாக்கு கேட்டனர். விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post வேலூர் அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு அருள்வாக்கு கொடுத்த காளை நள்ளிரவில் களைகட்டிய திருவிழா: 47 கிராம மக்கள் விடிய, விடிய வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Odugathur ,Perumal ,
× RELATED ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில்...