×

ஜம்மு-காஷ்மீரில் பயங்கர விபத்து 300 அடி பள்ளத்தில் பஸ் விழுந்து 38 பேர் பலி

தோடா: ஜம்மு-காஷ்மீர் தோடா மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சென்ற பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக பலியாகினர். ஜம்மு-காஷ்மீர் தோடா மாவட்டம் படோட்-கிஸ்ட்வார் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை சுமார் 55 பயணிகளுடன் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பக்கவாட்டில் உள்ள 300 அடி ஆழமான பள்ளத்திற்குள் விழுந்து நொறுங்கியது.

இந்த பயங்கர விபத்து குறித்து தகவல் அறிந்த தோடா மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு விரைந்தனர். மலைப்பாதையின் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் விழுந்த பஸ்சுக்குள் சிக்கியவர்களை பெரும் சிரமத்துடன் மீட்டனர். இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பலியானார்கள். படுகாயம் அடைந்த 19 பேரை மீட்ட மீட்பு குழுவினர் அவர்களை ஜம்மு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களில் 6 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

The post ஜம்மு-காஷ்மீரில் பயங்கர விபத்து 300 அடி பள்ளத்தில் பஸ் விழுந்து 38 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Doda ,Doda district ,Dinakaran ,
× RELATED நிலச்சரிவு: பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது..!!