×

தமிழ்நாட்டில் ஜப்பானை சேர்ந்த 6 நிறுவனங்கள் ரூ.819 கோடி முதலீடு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!!

ஜப்பான்: ஜப்பானை சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.819 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த ஆறு நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். 23ம் தேதியன்று சிங்கப்பூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர், தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக இன்று காலை டோக்கியோவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு, ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் கேட்டு அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த ஆறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்கள்:

1.தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், கியோகுட்டோ சாட்ராக் (KyoKuto Satrac) நிறுவனத்திற்கும் இடையே, காஞ்சிபுரம் மாவட்டம், மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 13 ஏக்கர் நிலப்பரப்பில், 113 கோடியே 90 இலட்சம் ரூபாய் முதலீட்டில் டிரக் வாகனங்களுக்கான பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

2. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், மிட்சுபா (Mitsuba) நிறுவனத்திற்கும் இடையே, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் மிட்சுபா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன தொழிற்சாலையை 155 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

3. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஷிமிசு (Shimizu Corporation) நிறுவனத்திற்கும் இடையே, கட்டுமானம், கட்டுமான பொறியியல் மற்றும் அதன் தொடர்புடைய வணிகத்தை தமிழ்நாட்டில் மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

4. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், கோயீ (Kohyei) நிறுவனத்திற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில், பாலிகார்பனேட் தாள் தயாரித்தல், கூரை அமைப்புகள் தயாரித்தல், கட்டுமானத் துறையில் பயன்படுத்த எலக்ட்ரானிக் கூறுகளுக்கான எக்ஸ்ட்ருஷன் லைன்கள் (extrusion lines for electronic components for use in construction industry) ஆகியவற்றை தயாரிப்பதற்கான தொழிற்சாலை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

5. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சடோ-ஷோஜி மெட்டல் வர்க்ஸ் (Sato-Shoji Metal Works) நிறுவனத்திற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் கட்டுமான உபகரணங்கள் துறையில் பயன்படுத்தப்படும் உயர்தர எஃகு பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

6. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், டஃப்ல் (Tofle) நிறுவனத்திற்கும் இடையே, 150 கோடி ரூபாய் முதலீட்டில் சோலார், எஃகு ஆலைகள், விண்வெளி மற்றும் குறைக்கடத்தி தொழில்களுக்கான துருப்பிடிக்காத எஃகு சிறப்பு நெகிழ்வான குழல்களை உற்பத்தி (stainless steel specialized flexible hoses) செய்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. என மொத்தம் 818.90 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. எஸ். கிருஷ்ணன், இ,ஆ,ப., தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.வே.விஷ்ணு, இ.ஆ.ப., கியோகுட்டோ சாட்ராக் நிறுவனத்தின் தலைவர் திரு. சடோஷி ஒகோமோட்டோ (Mr. Satoshi Okamoto), மிட்சுபா இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் திரு. கோஜி மிசுனோ (Mr. Koji Mizuno), ஷிமிசு நிறுவனத்தின் துணை பொது மேலாளர் திரு. ஹிடோஷி இசாவா (Mr. Hitoshi Iizawa), துணை இயக்குநர் திரு. மட்சுனாகா கசுநோரி (Mr. Matsunaga Kazunori), பாலிஹோஸ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனங்களான கோயீ நிறுவனத்தின் தலைவர் திரு. யோஷிஹிகோ சுஷிஹாசி (Mr. Yoshihiko Tsuchihashi), சடோ-ஷோஜி மெட்டல் வர்க்ஸ் நிறுவனத்தின் பிரிவு மேலாளர் திரு. அகினோ மியாசி (Mr. Akinao Miyauchi), டஃப்ல் நிறுவனத்தின் செயல் அலுவலர் திரு. யோச்சி ஓடா (Mr. Yoichi Oda), பாலிஹோஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. ஒய்.ஜெ. ஷபீர், இயக்குநர் திரு. ஹதிம் ஷபீர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாட்டில் ஜப்பானை சேர்ந்த 6 நிறுவனங்கள் ரூ.819 கோடி முதலீடு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!! appeared first on Dinakaran.

Tags : Japan ,Tamil Nadu ,MoU ,Chief Minister ,M.K.Stalin ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!