கொழும்பு: இலங்கை அரசால் கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த பிரச்னை குறித்து நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கூறியதாவது: இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடிக்கிறார்கள். இது இலங்கையின் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தப் பிரச்சினையை நாங்கள் இந்தியத் தரப்பிடமும் எடுத்துச் செல்கிறோம். இலங்கைக் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
பாக் ஜலசந்தியில் மீன்பிடித்த 19 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள மைலிட்டி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் மற்றும் படகுகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த பிரச்சினையை தூதரக ரீதியாக இந்தியாவிடம் கொண்டு செல்வதோடு, சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் மீனவர்களைக் கைது செய்ய இலங்கை அரசு, இலங்கை கடற்படைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
The post தமிழ்நாடு மீனவர்கள் அத்துமீறினால் கைது: இலங்கை அரசு மிரட்டல் appeared first on Dinakaran.
