×

மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரசில் மர்ம நபர்கள் அட்டூழியம்; ஓடும் ரயிலில் மயக்க டீ கொடுத்து 2 பெண் தொழிலாளியிடம் 5 சவரன் கொள்ளை: 15 மணி நேரத்திற்கு பின் அரக்கோணத்தில் மீட்பு


அரக்கோணம்: மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ‘டீ’யில் மயக்க மருந்து கொடுத்து 2 பெண் தொழிலாளியிடம் 5 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதனால் மயங்கிய இருவரையும் 15 மணி நேரத்திற்கு பிறகு அரக்கோணத்தில் மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கடலூர் மாவட்டம், மதியனூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரோகினி (56), தமிழ்ச்செல்வி (44). இருவரும் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், உறவினர் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக, கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வி மற்றும் ரோகினி ஆகிய இருவரும் மும்பை சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டு, விருதாச்சலத்தில் இறங்குவதற்கு ரயில் டிக்கெட் எடுத்து மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் ஏறி பயணம் செய்தனர்.

அதே பெட்டியில் அடையாளம் தெரியாத 3 நபர்கள் ஏறி இவர்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்து பழகி உள்ளனர். இதற்கிடையில், சோலாப்பூர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தது. அப்போது, அந்த அடையாளம் தெரியாத நபர்கள் தமிழ்ச்செல்வி மற்றும் ரோகினிக்கு மயக்க டீ கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதை தெரியாமல் இருவரும் வாங்கி குடித்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு, என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் இருவரும் மயக்கம் அடைந்தனர். இந்நிலையில், சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகு தமிழ்ச்செல்விக்கு லேசாக மயக்கம் தெளிந்து உள்ளது. அப்போது, ரயில் பெட்டியில் இருந்த சக பயணிகளிடம் என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் தெரியவில்லை. என்னுடன் வந்த உறவினர் இன்னும் மயக்கத்திலேயே உள்ளார். அவருக்கு என்ன ஆனது என்று ெதரியவில்லையே என கூறியபடி அலறி துடித்து உள்ளார்.

மேலும் அவர்கள் இருவரும் அணிந்திருந்த கம்மல், தாலி போன்ற நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, ரயில் இருந்த சக பயணிகள் உதவியுடன் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது இதுபற்றிய தகவல், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் மற்றும் போலீசார் நேற்று மாலை அரக்கோணம் ரயில் நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர். அப்போது, மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் 6வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.

பின்னர் ரயிலில் ஏறி மயங்கிய நிலையில் இருந்த தமிழ்ச்செல்வி மற்றும் ரோகினியை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்களிடம் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் பிளாஸ்கில் இருந்த டீயை கொடுத்து இருவரையும் மயக்கமடையச் செய்து அவர்களிடமிருந்து சுமார் 5 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

The post மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரசில் மர்ம நபர்கள் அட்டூழியம்; ஓடும் ரயிலில் மயக்க டீ கொடுத்து 2 பெண் தொழிலாளியிடம் 5 சவரன் கொள்ளை: 15 மணி நேரத்திற்கு பின் அரக்கோணத்தில் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Nagercoil Express ,Arakkon ,Arakkonam ,Mumbai-Nagarkovil ,Dinakaran ,
× RELATED மும்பை மாஜி போலீஸ் கமிஷனர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்