×

மழையால் தீவன தட்டுப்பாடு இல்லை பொய்கை சந்தை களைகட்டியது ரூ.80 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை

*வியாபாரிகள் மகிழ்ச்சி

வேலூர் : மழையால் தீவன தட்டுப்பாடு இல்லாத நிலையில், வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று விற்பனை களைகட்டியது. ரூ.80 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும்.

இச்சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக பசுக்கள், உழவு மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், கன்றுகள், எருமைகள், ஆடுகள், கோழிகள் கொண்டு வரப்படுகின்றன.

கால்நடைகள் மட்டுமின்றி அதோடு இணைந்த காய்கறி சந்தையும் இங்கு நடக்கிறது. சாதாரணமாக இங்கு கால்நடைகள் விற்பனை என்பது ரூ.70 லட்சம் முதல் ரூ.1.30 கோடி வரை அப்போதைய சூழலுக்கு ஏற்ப நடைபெறும். இந்நிலையில் நேற்று நடந்த மாட்டு சந்தையில் ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. விற்பனையும் களைகட்டியது.

இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கோடை முடிந்து தற்போது ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால் தீவன தட்டுப்பாடு இல்லை. இதனால் மாடுகள் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

தற்போது கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், சந்தைக்கு வந்தது. இவைகளில் விலை அதிகமாக உள்ளது. இதனால் விற்பனையும் ரூ.80 லட்சம் வரை நடந்தது. விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மாடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்’ என்றனர்.

The post மழையால் தீவன தட்டுப்பாடு இல்லை பொய்கை சந்தை களைகட்டியது ரூ.80 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Poigai market ,Vellore ,Poigai ,Poigai cattle market ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்