×

ராகுல் காந்தி அப்பீல் மனு நாளை மறுநாள் விசாரணை: குஜராத் நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: அவதூறு வழக்கில் சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த அப்பீல் மனுவை செசன்ஸ் நீதிமன்றம் நிராகரித்ததற்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் ராகுல்காந்தி முறையீடு செய்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது. இதன் காரணமாக வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவரது பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில், சூரத் நீதிமன்றத்தில், ராகுல் காந்தி, தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நீக்க கோரியும், வழக்கு நடைபெறும் வரையில் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரியும் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, ராகுல்காந்தி, தான் 19 ஆண்டுகளாக தங்கியிருந்த, அதிகாரப்பூர்வ அரசு பங்களாவை காலி செய்தார்.

இந்நிலையில் அவதூறு வழக்கில் சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை செசன்ஸ் நீதிமன்றம் நிராகரித்ததற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் (29ம் தேதி) நடைபெறும் என குஜராத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post ராகுல் காந்தி அப்பீல் மனு நாளை மறுநாள் விசாரணை: குஜராத் நீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Gujarat ,New Delhi ,Sessions Court ,
× RELATED மகாலட்சுமி யோஜனா ஏழைக்...