×

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடி நாளை மறுநாள் திறப்பு

சென்னை: பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடி வரும் 12ம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், 125வது வார்டுக்கு உட்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள லூப் சாலையின் இருபுறங்களிலும் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள இந்த லூப் சாலையை ஆக்கிரமித்து மீன்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகள் மற்றும் இங்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களால், லூப் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தியது. மேலும், அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு மீன் கடைகளை மாநகராட்சி அகற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து, மெரினா காவல் நிலையம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காதபடி கடைகளை ஒழுங்குபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. இதனிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது, மீனவர்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில், பட்டினப்பாக்கம் கடற்கரை லூப் சாலையில் ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டு விரைவில் மீனவர்கள் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்தார். முதல்வரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சியின் சார்பில் பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள லூப் சாலையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையிலும், மீனவர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மீன் அங்காடியில் மீனவர்களுக்கு கடை ஒதுக்கும் பணியும் ஏறத்தாழ கணக்கெடுப்பு மூலம் முடிவடைய உள்ளது. இதுகுறித்து நொச்சிக்குப்பம் மீனவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. மேலும், எந்தெந்த மீனவர்களுக்கு கடை ஒதுக்க வேண்டும் என மீனவர்கள் சங்கம் சார்பில் கணக்கெடுக்கப்பட்டு, சென்னை மாநகராட்சியிடம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இதனை சரிபார்க்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. விரைவில் முடிவு செய்யப்பட்டு மீனவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி 98% முடித்து விட்டது. தற்போது இந்த மீன் அங்காடியில் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன மீன் அங்காடி ஆக.12ம் தேதி திறக்கப்பட உள்ளது. மீன் அங்காடி திறக்கப்பட்டால் மீனவர்கள் நிச்சயம் பயன்பெறுவர். மீன் அங்காடி சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடி நாளை மறுநாள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Pattinpakkam Loop Road ,CHENNAI ,Pattinappakkam Loop Road ,Chennai Corporation ,Thenampettai Mandal ,125th Ward Pattinappakkam Loop Road ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...