×

ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் ரூ.1.20 கோடி மோசடி செய்த வாலிபர் கைது

ஆவடி: ஆவடி அடுத்த அம்பத்தூர் அ.கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (57). ஷேர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில், புகார் ஒன்று அளித்திருந்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த ஓராண்டுக்கு முன், எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு, ‘ஆன்லைன் டிரேடிங்’ குறித்து விளம்பரம் ஒன்று வந்தது. அந்த விளம்பரத்தை பார்த்து, அதில் கொடுக்கப்பட்டு இருந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினேன். அதில் பேசிய மர்ம நபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால், நல்ல கமிஷன் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்.

எனவே, அதை நம்பி ஆன்லைன் டிரேடிங்கில் சேர்ந்து, மர்ம நபர்கள் கொடுத்த வங்கி கணக்குகளில், பல தவணைகளில் ரூ.1.20 கோடி டெபாசிட் செய்தேன். இந்நிலையில், நான் முதலீடு செய்த தொகையில், எனது கமிஷனை எடுக்க முயன்றபோது, எனது வங்கி கணக்கு முடக்கப்பட்டது. எனவே, மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்து விசாரித்த ஆவடி சைபர் கிரைம் போலீசார், திருவள்ளூர் மாவட்டம், மணவூரைச் சேர்ந்த கிரிதரன் (23) என்பவரை கைது செய்தனர். பின்னர், நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் மோசடி கும்பல் பலரிடம் பல கோடி ரூபாய் ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்தது.

The post ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் ரூ.1.20 கோடி மோசடி செய்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Avadi ,Ambattur A. Gunasekaran ,Kallikuppet ,Avadi Central Crime Unit ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி போக்குவரத்து போலீசாருக்கு...