×

சினிமாவையும் மிஞ்சிய பரபரப்பு சம்பவம் ஓடும் ஆம்னி பேருந்தில் மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பஸ்சை சேஸ் செய்து மறித்து வாலிபர்களுக்கு உறவினர்கள் தர்மஅடி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் மருத்துவ மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 போதை வாலிபர்களை, பஸ்சை வழிமறித்து நிறுத்தி உறவினர்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சினிமாவை மிஞ்சிய இச்சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்டி ஹோமியோபதி படித்து வருகிறார்.

தீபாவளி விடுமுறைக்காக சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற அவர் நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து ஆம்னி பேருந்தில் கல்லூரிக்கு திரும்பி கொண்டிருந்தார். பஸ் நள்ளிரவு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வந்தபோது, அங்கு திருநெல்வேலியைச் சேர்ந்த 12 இளைஞர்கள் அதில் ஏறியுள்ளனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 2 வாலிபர்கள் மருத்துவ மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாணவி முறையிட்டும் டிரைவரும், கண்டக்டரும் கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், விழுப்புரம் பகுதியில் உள்ள தனது உறவினருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கூறி அழுதுள்ளார். உடனே அவரது உறவினர்கள் பேருந்து எங்கு வருகிறது என்று கேட்டபோது விழுப்புரத்தை நெருங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேருந்தை காரில் விரட்டிச் சென்று விழுப்புரம் அருகே பிடாகம் பகுதியில் மடக்கி நிறுத்தியுள்ளனர். பின்னர் 2 வாலிபர்களையும் கீழே இறக்கி தர்மஅடி கொடுத்துள்ளனர். தகவலறிந்த தாலுகா போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

பஸ் காவல்நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு பெண்ணிடமும், அந்த வாலிபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேரும் தீபாவளியை கொண்டாடுவதற்காக புதுச்சேரிக்கு வந்திருந்ததும், பின்னர் விடுமுறையை கழித்துவிட்டு போதையில் ஊருக்கு செல்ல புதுச்சேரியிலிருந்து, திண்டிவனம் வந்து அங்கிருந்து ஆம்னி பேருந்தில் பயணித்ததும் தெரியவந்தது. அதில் திருநெல்வேலி சிந்துபூந்துறையைச் சேர்ந்த முகமதுயாசர்(20), பெருங்குடியில் டெலிகால் சென்டரில் வேலை செய்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த தங்கமாரியப்பன்(21) துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். மாணவி அளித்த புகாரின்பேரில் 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். மற்ற 10 வாலிபர்களையும் வேறொரு பஸ்சில் அனுப்பி வைத்தனர். மாணவியை அவர் பயணித்த அதே பஸ்சில் போலீசார் அனுப்பி வைத்தனர். கீதாகோவிந்தம் சினிமாவில் வருவதையுயும் மிஞ்சிய இச்சம்பவமும், பெண்ணின் உறவினர்களிடம் தர்மஅடி வாங்கும் இளைஞர்களின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

The post சினிமாவையும் மிஞ்சிய பரபரப்பு சம்பவம் ஓடும் ஆம்னி பேருந்தில் மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பஸ்சை சேஸ் செய்து மறித்து வாலிபர்களுக்கு உறவினர்கள் தர்மஅடி appeared first on Dinakaran.

Tags : Villupuram ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தல்;...