×

பாலியல் குற்றத்திற்காக சட்டங்கள் தீவிரமாக்கப்பட்டது என்றால் பாஜ நிர்வாகிகளை முதலில் கைது செய்ய வேண்டும்: திருமுருகன் காந்தி பேச்சு

சென்னை: பாலியல் குற்றத்தை தடுக்கத்தான் சட்டங்கள் தீவிரமாக்கப்பட்டது என்றால், முதலில் பாஜ நிர்வாகிகளைதான் கைது செய்ய வேண்டும் என்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி கூறினார். புழல் அடுத்த செங்குன்றத்தில் மே17 இயக்கம் சார்பில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

சமஸ்கிருதத்தில் பெயர்களை மாற்றியும், அரசியலமைப்பு, மனித உரிமைக்கு எதிராக கருப்பு சட்டங்களை அமல்படுத்தியதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, திருமுருகன்காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மோடி அரசு மக்களின் கருத்துகளை கேட்காமல் எதேச்சதிகாரமாக சட்டங்களை சம்ஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்து கொடூர சட்டமாக மாற்றி உள்ளது. அடக்குமுறை சட்டங்களாக மாற்றியதால் சாமானியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டங்களை எதிர்த்தது போல புதிய 3 குற்றவியல் சட்டங்களை பொதுமக்கள் எதிர்த்து போராடி அதனை திரும்ப பெறச் செய்ய வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை முறையாக பதிவு செய்வதில்லை. குத்துச்சண்டை வீராங்கனைகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட போது பாஜ நிர்வாகிகளை கைது செய்யாதவர்கள் பெண்களை பாதுகாப்பவர்கள் போல சித்தரிப்பதை நம்ப முடியாது. பாலியல் குற்றங்களுக்கு எதிராக சட்டங்கள் தீவிரமாக்கப்பட்டுள்ளது என்றால் முதலில் பாஜ நிர்வாகிகளைதான் கைது செய்ய ேவண்டும். மணிப்பூரில் பெண்களை சீரழித்தவர்களை இதுவரை கைது செய்யவில்லை என்றார்.

The post பாலியல் குற்றத்திற்காக சட்டங்கள் தீவிரமாக்கப்பட்டது என்றால் பாஜ நிர்வாகிகளை முதலில் கைது செய்ய வேண்டும்: திருமுருகன் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Thirumurugan Gandhi ,CHENNAI ,Puzhal ,Senggunram ,
× RELATED எடப்பாடி முன்னிலையில் மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்