திருத்துறைப்பூண்டி, நவ.22: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 14,500 எக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய மழையின் பயனாக பயிர் வளர்ச்சி நன்றாக உள்ளது. வயல் வரப்புகளில் ஈரப்பதத்தை பயன்படுத்தி வரப்பு உளுந்து விதைத்தால் நன்கு முளைத்து செழித்து வளரும். சம்பா தாளடி பயிர் அறுவடைக்கு முன்பாகவே வரப்பு உளுந்து அறுவடைக்கு வந்துவிடும். எனவே விவசாயிகள் வரப்பு உளுந்து சாகுபடிக்காக தனி கவனம் கொள்ள தேவையில்லை. ஒரு ஏக்கர் வரப்பு உளுந்து சாகுபடி செய்ய 2 கிலோ விதை தேவைப்படும் விதைப்பதற்கு முன்னதாக வயல் வரப்புகளில் உள்ள களைகளை களைக்கொல்லி மருந்து தெளித்து அழித்த பின்பு வரப்பு சுத்தமாக இருக்கும்போது விதைகளை ஊன்ற வேண்டும்.
வரப்பு உளுந்து சாகுபடிக்கு தேவையான ஆடுதுறை 5 உளுந்து திருத்துறைப்பூண்டி, விளக்குடி, ஆலத்தம்பாடி, கட்டிமேடு முதலிய வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விதைப்பதற்கு முன்பாக விதை நேர்த்தி செய்யவேண்டும். 2 கிலோ விதைக்கு 20 கிராம் சூடோமோனாஸ், ஒரு பாக்கெட் ரைசோபியம், ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை வடித்த கஞ்சியில் கலந்து விதைகளை கலந்து சுமார் 15 நிமிடம் நிழலில் உலர்த்தி பிறகு இட்டால் அதிக மகசூல் கிடைக்கும். சூடோமோனாஸ் மற்றும் உயிர் உரங்கள் 50 சத மானியத்தில் கிடைக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்