ஆனைமலை, நவ.12:பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள். அமாவாசை, வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் முக்கிய விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். தினசரி காலை 6 மணி நடை திறந்து இரவு 8 மணிக்கு மூடப்படும்.குறிப்பாக அமாவாசைக்கு முந்தைய நாள் இரவு கோயில் நடை சாத்தப்படாமல் இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக வரும் 14ம் தேதி இரவு அமாவாசைக்கு முன்தினம் இரவு நடை 8 மணிக்கு அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகமான பக்தர்கள் அமாவாசைக்கு முந்தைய நாள் இரவு கோயில் நடை திறந்திருக்கும் என நினைத்து வந்துவிடுவார்கள் என்பதற்காக முன்கூட்டியே பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.