ஈரோடு, நவ. 10: அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை நேற்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட பொதுச்செயலாளர் குழந்தைசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மண்டல செயலாளர் ஜான் கென்னடி முன்னிலை வகித்தார். இதில், 2019-2020ம் ஆண்டுக்கான 10 சதவீத போனஸ் அறிவிப்பினை அரசு திரும்ப பெற வேண்டும். தொழிற்சங்க தலைவர்களை அழைத்து பேசி 20 சதவீதம் போனஸ் வழங்கிட வேண்டும். பண்டிகை முன் பணம் ரூ.10 ஆயிரம் உடனே வழங்க வேண்டும்.
14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும். 15 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் திருமுருகன், டி.டி.எஸ்.எப். மாநில பொருளாளர் குணசேகரன், ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயராமன், தமிழ்செல்வன் மற்றும் எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.