×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பு

ஈரோடு, நவ.6: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் நேற்று மாடுகள் வரத்து அதிகரித்ததால், வெளிமாநில வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் ேநற்று மாட்டு சந்தை கூடியது. சந்தைக்கு நேற்று முன்தினம் இரவு முதலே ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கால்நடை வளர்ப்போரும், விவசாயிகளும் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மாடுகளை வாங்க தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்த வியாபாரிகளும் அதிகளவில் வந்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் கூடிய சந்தையில் கடந்த 4 வாரத்தை காட்டிலும் அதிகளவில் மாடுகள் வரத்தானது. இதனால், வெளிமாநில வியாபாரிகள் ஆர்வத்துடன் மாடுகளை வாங்கி சென்றனர். இதுகுறித்து மாட்டு சந்தை நிர்வாகிகள் கூறுகையில்,‘இந்த வாரம் கூடிய சந்தையில் பசு- 400, எருமை- 150, கன்று- 100 என 650 மாடுகள் வரத்தானது. இதில், அதிக கறவை மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும், கன்று ரூ.9 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டன. தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால், பணம் தேவை அதிகரிக்கும் என்பதால் அதிகளவில் மாடுகள் வரத்தானது. வரத்தான மாடுகளில் 80 சதவீதம் விற்பனையானது. அடுத்த வாரம் கூடும் சந்தையில் இதேபோல் மாடுகள் அதிகளவில் வரத்தாகும்’ என்றனர்.

Tags : festival ,Karungalpalayam ,Deepavali ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...