பெரம்பலூர், அக். 20: திருச்சி டோல்கேட் நிறுவனம் கடந்த 12 ஆண்டுகளாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளை ஒப்பந்தம் பெற்று நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் சுங்கச்சாவடிகளை துணை ஒப்பந்த முறையில் பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் இந்த சுங்கச்சாவடிகளில் பணிபுரியும் 250 ஊழியர்களின் அடிப்படை வசதிகள், ஊதியம் மற்றும் மருத்துவ வசதிகள் எதுவும் முறையாக செய்து தரவில்லையென கூறி திருமாந்துறை சுங்கச்சாவடி அலுவலகம் முன் நேற்று தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரதத்தை வேப்பூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் துவக்கி வைத்தார். பெரம்பலூரை சேர்ந்த செல்லபிள்ளை, வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, ஏஐடியு தலைவர் ஞானசேகர், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கூட்டமைப்பு தலைவர் ரவி, மாநில பொது செயலாளர் காரல் மார்க்ஸ், துணை செயலாளர் விஜயகுமார் உட்பட பலர் பேசினர். மாலை 3 மணி வரை எந்த உடன்பாடும் ஏற்படாததால் திருமாந்துறை மற்றும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடிகளிலும் கேட்டுகள் திறக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் இலவசமாக சென்று வந்தனர். உண்ணாவிரதம் தொடர்ந்து நடந்தது.