அரியலூர், அக்.18: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பிய உபி முதல்வர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அஞ்சல் அட்டை மூலம் கண்டனம் தெரிவிக்கும் அஞ்சலட்டை போராட்டம், மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில், அரியலூர் மாவட்டம், திருமானூர் தபால் நிலையத்தில் நடைபெற்றது. இந்த அஞ்சலட்டை போராட்டத்திற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி மாரியம்மாள் தலைமை வகித்தார்.
அரியலூர் சட்டமன்ற தொகுதி தலைவி அங்கையர்கண்ணி, வட்டார தலைவி கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த பெண் பாலியல் வன்கொடுமை கொலையை கண்டித்து பிரதமர் மற்றும் உபி முதல்வர் ஆதித்யநாத் ஆகியோருக்கு கண்டன தபால் அட்டை மாவட்ட மகளிர் காங்கிரஸ் கட்சியினர் அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில், கட்சியின் வட்டார தலைவர்கள் சீமான் (கிழக்கு), திருநாவுக்கரசு (மேற்கு), பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில பொதுச்செயலாளர் சுந்தர.சோழன். திருமானூர் நகர தலைவர் வினோத்குமார், சேவாதள வட்டார தலைவர் கங்காதுரை, மாவட்ட மாணவரணி தலைவர் கபிலன் உள்ளிட்ட கட்சியின் மகளி அணியினர், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.