×

நலவாரிய ஓய்வூதியர்கள் ஆயுள் சான்று சமர்பிப்பது அவசியம்

ஈரோடு,அக்.16:  அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியர்கள் வருகின்ற டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆயுள் சான்றை சமர்பிக்க வேண்டும் என்று தொழிலாளர்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தொழிலாளர் உதவி ஆணையர் பாலதண்டாயுதம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியம் உள்ளிட்ட 17 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்து, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் நடப்பாண்டுக்கான ஆயுள் சான்றினை இந்தாண்டு மட்டும் பதிவு தபாலில் வருகின்ற டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

கொரோனா தொற்று காரணமாக அலுவலகத்திற்கு நேரில் வருவதை தவிர்க்க வேண்டும். ஆயுள்சான்று அளிக்க ஓய்வூதியர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. பதிவு தபாலில் அனுப்பப்படும் ஆயுள்சான்று ஏற்றுக்கொள்ளப்படும். ரேஷன் கார்டு, ஆதார்கார்டு, வங்கி பாஸ்புத்தகம் ஆகியவற்றுடன் சான்றொப்பமிட்ட நகல் மற்றும் போட்டோ 2, அரசு மருத்துவரிடமோ அல்லது அரசிதழ் பதிவு பெற்ற அரசு அதிகாரியிடமோ உயிருடன் இருப்பதற்கான சான்றின் அசல் ஆகியவற்றை பதிவு தபாலில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம்(சமூக பாதுகாப்பு திட்டம்), ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலக வளாகம், அரசு ஐடிஐ பின்புறம், சென்னிமலை ரோடு, ஈரோடு 638009 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Welfare pensioners ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...