திருவெறும்பூர், மார்ச் 19: திருவெறும்பூர் அருகே பூலாங்குடி காலனி நரிக்குறவர் காலனிக்கு கேரளாவில் இருந்து வந்த 28 நரிக்குறவர்களை நவல்பட்டில் உள்ள திருவெறும்பூர் வட்டார மருத்துவ குழு மற்றும் வருவாய்த்துறையினர் கொரொனோ வைரஸ் பாதிப்பு இருக்குமா என கண்காணித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரொனோ வைரஸ் நோய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனால் உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழக அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடி நரிக்குறவர் காலனிக்கு கேரளாவிலிருந்து நரிக்குறவர்கள் 28 பேர் கடந்த 16ம் தேதி ரயில் மூலம் வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதேனும் இருக்கும் என தகவல் கிடைத்ததை தொடர்ந்து அப்பகுதியில் திருவெறும்பூர் வருவாய் குழுவினர் மற்றும் வட்டார மருத்துவமனை அலுவலர் சுகுமார் தலைமையில் மருத்துவக்குழுவினர் நரிக்குறவர் காலனிக்கு சென்று சம்பந்தப்பட்ட நரிக்குறவர்களை பரிசோதனை செய்ததோடு அவர்களை 14 நாட்களுக்கு வேறு எங்கும் செல்லக்கூடாது. தொடர்ந்து அந்த பகுதியை மருத்துவ குழுவினரும் வருவாய் குழுவினரும் கண்காணிப்பார்கள். சம்மந்தப்பட்ட 28 பேரில் யாருக்கேனும் காய்ச்சல், இருமல், சளி ஏதேனும் தொல்லைகள் இருந்தால் உடனடியாக நவல்பட்டு உள்ள திருவெறும்பூர் வட்டார மருத்துவமனைக்கு வரவேண்டும். மேலும் அந்த பகுதியில் சுகாதார செவிலியர் தொடர்ந்து தினமும் அவர்களை கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஞானாமிர்தம் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் காவல்துறையினரை அழைத்து கொரொனோ வைரஸ் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.