புதுச்சேரி, மார்ச் 13: புதுச்சேரியில் அரசு துறைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி- சேலை மற்றும் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த துணிமணிகளை பான்பேப் மற்றும் பாண்டெக்ஸ் மூலம் வழங்கி வந்தது. இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்ட நிலையில் சில வருடமாக பண்டிகை காலங்களில் மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச துணிக்கு பதிலாக பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. சில திட்டங்களுக்கு வெளிமார்க்கெட்டில் வேட்டி- சேலைகள் வாங்கப்பட்டதால் பாரம்பரிய தொழிலை செய்த கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஏஐடியுசி கைத்தறி நெசவாளர்கள் நேற்று முன்தினம் தொடர் போராட்டத்தை தலைமை தபால் நிலையம் முன்பு தொடங்கினர். முதல்நாளில் கஞ்சி காய்ச்சிய அவர்கள், 2ம் நாளான நேற்று மற்றொரு நூதன போராட்டத்தை நடத்தினர். அதாவது தறி, ராட்டினம் உள்ளிட்ட தறி நெய்யும் கருவியோடு நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கவர்னருக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். இதில் ஏஐடியுசி நெசவாளர்கள் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.