மேட்டூர், மார்ச் 12: கொரோனா வைரஸ் எதிரொலியாக, மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பயோ மெட்ரிக் வருகை பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுகிறது. ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் வருகையை பதிவு செய்ய, பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஊழியரும் தங்கள் விரல் ரேகையை பதிந்து வருகையை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ், தமிழகத்திலும் பரவ தொடங்கி உள்ளது. பயோமெட்ரிக் இயந்திரத்தில் அனைத்து ஊழியர்களும் ஒரே இடத்தில் விரல் ரேகையை பதிவு செய்வதன் மூலம், ஒருவரிடம் இருந்து மற்றவர்களுககும் வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் கடந்த 10ம்தேதி முதல், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயோ மெட்ரிக் வருகை பதிவு, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அனல் மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.