சேலம், மார்ச் 10:உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சேலத்தை சேர்ந்த சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சேலம் பீமா ஜூவல்லர்ஸ் மற்றும் கிரியேட்டர்ஸ் அகாடமி அன்ட் ஈவன்ட் மேனேஜ்மென்ட் இணைந்து, சாதனை பெண்கள் 2020’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அரசு கலைக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பீமா ஜூவல்லர்ஸ் மேலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். கிரியேட்டர்ஸ் அகாடமி அன்ட் ஈவன்ட் மேனேஜ்மென்ட் அமைப்பாளர்கள் ஹேமலதா, சிட்டு கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், சேலத்தில் 5,000க்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதி மரியாதை செய்து, அடக்கம் செய்த சீதா, ஆசிரியர் படிப்புக்கு உதவிபுரிந்து, வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் கலைச்செல்வி, பிளஸ் 2 படிக்கும் ஆதி திராவிட பெண்களுக்கு உதவிபுரிந்து வரும் கல்பனா இன்பராஜ், சுய உதவிகளுக்கு வழிகாட்டியாய் இருந்து ஒரு லட்சம் பேருக்கு கடன் பெற்றுத்தந்த மீரா மற்றும் பெண்களுக்கான இலவச மனநல விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மேஹர் ஆகியோருக்கு, சாதனை பெண்கள் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பீமா ஜூவல்லர்ஸ் பணியாளர்கள், கிரியேட்டர்ஸ் அகாடமி உறுப்பினர்கள், அரசு கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.