×

கொத்தனார் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் வாலிபர் சரண்

சென்னை: திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். திருப்போரூர் கிரிவல பாதையில் உள்ள இவருக்கு சொந்தமான வீட்டை கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் வாடகைக்கு விட்டிருந்தார்.
வாடகைக்கு வந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. மேலும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் திருப்போரூர் போலீசாருக்கு வெங்கடேசன் தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. போலீசார் அதை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அந்த நபர் பின்னந்தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் வாடகைக்கு வந்த நபர்கள் யார்? அவருடன் செல்போனில் பேசியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்த நபர் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், பொன்னூர் பகுதியை சேர்ந்த ஆஞ்சநேயா (52) என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து மேலும் தகவல்கள் கிடைக்காத நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் வாலிபர் ஒருவர் இந்த கொலையை தான் செய்ததாக கூறி சரணடைந்தார். தகவலறிந்ததும் திருப்போரூர் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து சரணடைந்த வாலிபரை போலீஸ் விசாரணைக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் தனது பெயர் துர்கா பிரசாத் (23) என்றும், ஆஞ்சநேயாவின் சொந்த ஊரான பொன்னூர் பகுதியை சேர்ந்த என்றும் இருவரும் கட்டிட கொத்தனார் வேலை செய்து வந்ததாகவும், அடிக்கடி கள்ளுக்கடையில் சந்தித்து நட்பு ஏற்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார். தனது மனைவி வேறொருவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு தன்னை விட்டு சென்றுவிட்டதால் சென்னை ஓஎம்ஆர் பகுதியில் வீடு எடுத்து தங்கி வேலை செய்துள்ளார். சம்பவம் நடந்த அன்று இருவரும் சேர்ந்து மது அருந்தியபோது தனது மனைவி வேறொருவருடன் சென்றுவிட்டதை குறித்து அவதூறாக பேசியதால் கோபமடைந்து தாக்கியயுள்ளார். இதில் தலையில் காயமடைந்து இறந்துவிட்டதால் பயந்து வீட்டை பூட்டிவிட்டு வெளியேறி விட்டதாகவும் விசாரணையில் தெரிவித்தார். இந்நிலையில் அவரிடம் வாக்குமூலம் பெற்று விட்டதாலும், போலீசாருக்கு போதிய தகவல் கிடைத்துவிட்டதாலும் துர்கா பிரசாத்தை இன்று மீண்டும் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.

Tags : Charan ,court ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...