அரூர், மார்ச் 6: அரூரை அடுத்த தீர்த்தமலையில் கிசான் கடன் அட்டைகள் பெறுதல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தீர்த்தமலை கனரா வங்கி சார்பில் நடைபெற்ற இந்த முகாமை, வங்கியின் கிளை மேலாளர் சின்னராஜ் தொடங்கி வைத்தார். கிசான் கடன் அட்டைகள் இருந்தால், விவசாயிகள் வேளாண்மை இடுபொருள்கள், உரம், யூரியா உள்ளிட்ட பொருட்களை எளிதில் பெற முடியும். சிறிய அளவிலான கடன் தொகைகளை, அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழியாக பெற முடியும். உரங்கள், விதைகளை விவசாயிகள் தங்களின் வசதிக்கு ஏற்றவாறு தேர்வு செய்து, வாங்கிக் கொள்ள முடியும். இந்த கிசான் கடன் அட்டையில் விவசாயிகளுக்கு விபத்து காப்பீடு வசதிகள் உள்ளன. எனவே, விவசாயிகள் அனைவரும் கிசான் கடன் அட்டைகளை பெற வேண்டும் என அவர் விளக்கி கூறினார். இந்த முகாமில் தீர்த்தமலை வட்டார பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.