திருச்செங்கோடு, மார்ச் 5: எலச்சிபாளையம் அருகே மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடந்தன. நாமக்கல் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில், எலச்சிபாளையம் அருகேயுள்ள கல்லுப்பாளையத்தில், மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடந்தன. போட்டிகளை தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக இணை செயலாளர் சதாசிவம் தலைமையில், தமிழக வீரர் அசோக்குமார் துவக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், 30 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் முதலிடம் பிடித்த மல்லசமுத்திரம் அணிக்கு பதக்கம் மற்றும் ₹15 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. 2ம் இடம் பிடித்த கொழிஞ்சிப்பட்டி அணிக்கு ₹10 ஆயிரமும், 3ம் இடம்பிடித்த திருச்சி போலீஸ் அணிக்கு ₹7 ஆயிரமும், 4ம் இடம்பிடித்த கல்லுப்பாளையம் எப்சிசி அணிக்கு ₹5 ஆயிரமும், 5ம் இடம்பிடித்த சேலம் உமையாள்புரம் அணிக்கு ₹4 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.