காரைக்கால், மார்ச்5: புதுச்சேரி விளையாட்டு மற்றும் கலாசார விழாவில் சிறப்பிடம் பெற்ற, காரைக்கால் அண்ணா அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. புதுச்சேரி அரசு சார்பில், அண்மையில் விளையாட்டு மற்றும் கலாசார விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர், இந்த விழாவில், பங்கேற்று பல பதக்கங்களை வென்றனர். இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, கல்லூரி முதல்வர் வியாசராயர் தலைமை வகித்தார். மாவட்ட போலீஸ் எஸ்.எஸ்.பி மகேஷ்குமார் பன்வால், போலீஸ் எஸ்.பிகள் வீரவல்லபன், ரகுநாயகம் மற்றும் பலர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, விளையாட்டு மற்றும் கலாசார விழாவில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி சிறப்பித்தனர். மேலும், புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்களையும் மாவட்ட போலீஸ் எஸ்.எஸ்.பி மகேஷ்குமார் பன்வால் பாராட்டினார். முடிவில், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சவரிராஜன் நன்றி கூறினார்.