ஆவடி, மார்ச் 4: ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில்வே மேம்பாலத்திற்கு ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விறு விறுப்பாக நடக்கிறது. இப்பணிகள் வரும் செப்டம்பரில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் ஆவடி அருகே அண்ணனூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை சுற்றி திருமுல்லைவாயல், அண்ணனூர், அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மூன்று நகர், ஜோதி நகர், சிவசக்தி நகர், ஜெ.பி.எஸ்டேட், சோழன்நகர், சக்திநகர், பல்லவன் நகர், வைஷ்ணவி நகர், ரெட்டிபாளையம், கோணாம்பேடு உள்ளிட்ட பல நகரங்கள் உள்ளன.மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார், அரசு ஊழியர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினசரி இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அண்ணனூர் ரயில்வே கேட்டை கடந்து தான் அயப்பாக்கம், திருவேற்காடு, அம்பத்தூர், ஆவடி பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.அவ்வாறு சென்றபோது, ரயிலில் அடிப்பட்டு நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து, இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் அண்ணனூர் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்தால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம்தான் அமைக்க முடியும் என தீர்மானித்தனர்.இதன்படி, மத்திய, மாநில அரசுகள் இணைந்து திருமுல்லைவாயல் - அண்ணனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே 2006ம் ஆண்டில் ரூ.15.6கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கினர். இதற்கான பணிகள் கடந்த 2010ம் ஆண்டு ரயில்வே பாதையில் தொடங்கி நடைபெற்றது. மேலும், கடந்த 2012ம் ஆண்டு ரயில்வே தண்டவாள பகுதியில் மேம்பாலம் கட்டும் பணியும் முடிவடைந்துவிட்டது. பின்னர், மாநில அரசு செய்ய வேண்டிய மேம்பாலப் பணிகள் ஆரம்பிக்கப்படாமல் கடந்த 6 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு இருந்தது.
இதுகுறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள், மேம்பால பணிகளை விரைந்து தொடங்க கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் பலமுறை புகார் அனுப்பியிருந்தனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பல்வேறு பிரச்சனைகளால் கிடப்பில் கிடந்த அண்ணனூர் மேம்பால பணிகள் குறித்து துறை அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். மேலும், 2006ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட மதிப்பீட்டைவிட அதிக நிதி தேவைப்பட்டது. இதோடு மட்டுமல்லாமல், அயப்பாக்கம், திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளில் மேம்பால கட்ட நிலகையெடுப்பு பணிகளும் அதிக அளவு நிதி தேவைப்பட்டது. இதனை அடுத்து, 2017ம் ஆண்டு மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலம் கட்ட ரூ.27 கோடியும், நிலகையெடுப்பு பணிக்கு ரூ.25 கோடி நிதியும் சேர்ந்து ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், 2017ம் ஆண்டு செப்டம்பரில் மேம்பாலப்பணிக்கு டெண்டர் விடப்பட்டது. மேலும், இப்பணிகளுக்காக நில கையெடுப்பு, மேம்பால மறு வடிவமைப்பு பணிகளால் காலதாமதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து, கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணிகள் தொடங்கியது. இப்பணிகள் வருகின்ற செப்டம்பரில் முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் இரு புறமும் 650 மீட்டர் நீளம், 7.5 மீட்டர் அகலத்தில் மேம்பாலப்பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த மேம்பாலம் 35 ஓடுதளங்கள் கொண்டவையாகும். இதில், தற்போது வரை 24 ஓடுதளங்களின் பணிகள் முடிந்துவிட்டது. இன்னும், 11 ஓடு தளங்களின் பணிகள் நடைபெற இருக்கிறது. இப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தமேம்பால பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். இதன் மூலம், திருமுல்லைவாயல், அண்ணனூர், அயப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வளர்ச்சியடையும் என்றனர்.
