கரூர், மார்ச் 2: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு தாந்தோணி கிழக்கு ஒன்றியம் மணவாடி ஊராட்சி கழகம் சார்பில் மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் மணவாடி பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து வெள்ளியணை வரை நடத்தப்பட்ட மாட்டு வண்டி எல்லை பந்தயப் போட்டி பெரியமாடு (8கிமீ), கரிச்சான் மாடு (6கிமீ) என இரண்டு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தங்கள் மாடுகளுடன் போட்டியில் கலந்து கொண்டனர். நேற்று காலை 7மணி முதல் 10மணி வரை போட்டிகள் நடத்தப்பட்டன. பெரிய மாடு போட்டியில் தஞ்சாவூர் கடம்பங்குடி காமாட்சி அம்மன் முதலிடத்தையும், திருச்சி மாவட்டம் கிளியூர் ஆரிய நாராயணசாமி இரண்டாவது இடத்தையும், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் புகழேந்தி மூன்றாவது இடத்தையும், தேனி மாவட்டம் சின்னமனுர் தங்கம் ரேயோஸ் நான்காவது இடத்தையும் பெற்றனர்.
கரிச்சான் மாடுக்கான போட்டியில் தேனி மாவட்டம் கம்பம் பெரியமுத்து முதல் பரிசையும், தேனி மாவட்டம் பண்ணைபுரம் சாமி பாலாஜி சபிக்ஷா இரண்டாவது பரிசையும், மதுரை மாவட்டம் ஆட்டுக்குளம் லிங்கேஸ்வரன் மூன்றாவது பரிசையும், தஞ்சாவூர் மாவட்டம் அரசகுடி குருநாதர் சாமி நான்காவது பரிசையும் பெற்றனர். தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. மணவாடி ஊராட்சி செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் மூர்த்தி வரவேற்றார். இரண்டு வகையான போட்டிகளிலும் முதல் நான்கு இடங்களை பெற்ற அனைவருக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பரிசுத் தொகை மற்றும் கோப்பைகளை வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில், நகரச் செயலாளர்கள் நெடுஞ்செழியன், ஜெயராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தானேஸ், கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்