×

காரையில் பருத்தி மறு ஏலம் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை

பாடாலூர், பிப். 18: ஆலத்தூர் தாலுகா காரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் பருத்தி மறு ஏலம் நடைபெற்றதில் உரிய விலை கிடைக்க வில்லை எனக்கூறி வேதனையுடன் விற்பனை செய்து சென்றனர். ஆலத்தூர் தாலுகா காரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெறுவதாக விவசாயிகளுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் பருத்தி 1 கிலோ ரூ 45 முதல் 55 வரை விற்பனை செய்து தரப்படும் என விவசாயிகளுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை நம்பி ஆலத்தூர் தாலுகா திம்மூர், இலுப்பைகுடி, கொளத்தூர், கொளக்காநத்தம், கூடலூர், சிறுகன்பூர், வரகுபாடி, அயனாபுரம், அனைப்பாடி, காரை, புதுக்குறிச்சி மற்றும் திருச்சி மாவட்டம் எதுமலை, சணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 57 விவசாயிகள் 555 மூட்டை பருத்தியை விற்பனை செய்வதற்கு காரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு கொண்டுவந்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு வியாபாரிகள் ஒவ்வொரு விவசாயின் பருத்தியையும் சாம்பிள் எடுத்து அதற்கு விலை நிர்ணயம் செய்தனர்.

அப்போது ஒரு கிலோ பருத்தி விலை ரூ.11 முதல் ரூ. 43 வரை விலை அறிவிக்கப்பட்டது. இதனால் கொதிப்படைந்த விவசாயிகள் காரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு பருத்தி சாகுபடி செய்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வாகனங்கள் மூலம் வாடகை கொடுத்து நல்ல விலை கிடைக்கும் என நினைத்து இங்கு கொண்டு வந்தோம்.

ஆனால் இங்கு மிகவும் குறைவாக 11 ரூபாயா என அடிமாட்டு விலைக்கு பருத்தியை கேட்கின்றனர். மற்ற பகுதிகளில் ரூ. 45 முதல் ரூ.55 வரை விற்பனையாகி வரும் நிலையில் இங்கு இவ்வளவு அடிமாட்டு விலைக்கு பருத்தி ஏலம் அறிவித்துள்ளது மிகவும் வேதனையாக உள்ளது.
 எனவே எங்களுக்கு உரிய விலை கிடைக்க மறு ஏலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து நேற்று மறு ஏலம் விடப்பட்டது. மறு ஏலத்தில் ரூ.20 முதல் ரூ.43 வரை வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். இந்த மறு ஏலத்தில் கட்டுபடியான விலை கிடைத்த விவசாயிகள் விற்பனை செய்து சென்றனர். அதில் பருத்தியை எடுத்து வந்து விட்டோம். மீண்டும் எடுத்து சென்றால் அதற்கு வேறு செலவாகும்
அதனால் கிடைத்த விலைக்கு விற்பனை செய்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று புலம்பியபடியே வேதனையுடன் சிலர் விற்பனை செய்து சென்றனர். சிலர் உரிய விலை கிடைக்க வில்லை எனக்கூறி வேதனையுடன் விற்பனை செய்யாமல் திரும்பி எடுத்து சென்றனர்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...