×

உழவர்கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு 15 நாளில் கடன் அட்டை வழங்கப்படும்


தஞ்சை, பிப்.12: உழவர்கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு 15 நாட்களுக்குள் கடன் அட்டை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதமரின் விவசாயி கவுரவ நிதித் திட்ட பயனாளிகளுக்கு உழவர்கடன் அட்டையை வழங்குவதற்காக சிறப்பு பிரச்சாரம் மத்திய அரசால் கடந்த 8ம் தேதியிலிருந்து துவங்கப்பட்டுள்ளது. இப்பிரசாரத்தின் மூலம் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு 15 நாட்களுக்குள் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது. கடன் அட்டையை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விவசாய சேமிப்பு திட்ட கணக்கு உள்ள வங்கிக் கிளையை அணுகி உழவர் கடன் அட்டையை பெற்று மானிய சலுகையுடன் வங்கிக் கடன் பெறலாம். உழவர் கடன் அட்டையை ஏற்கனவே பெற்றுள்ள விவசாயப் பயனாளிகள் தங்களின் வங்கிக் கிளையை அணுகி கடன் தொகையின் வரம்பை உயர்த்த விண்ணப்பிக்கலாம். செயல்படாத உழவர் கடன் அட்டை உள்ளோர் வங்கி கிளையை அணுகி கடன் அட்டையை செயல்படுத்தவும்,

புதிய கடன் வரம்பிற்கு அனுமதியும் பெறலாம். உழவர்கடன் அட்டை இல்லாத விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள் மற்றும் அடங்கலுடன் புதியகடன் அட்டை பெறுவதற்கு தங்களது வங்கிக் கிளையை அணுகலாம். மேலும் உழவர் கடன்அட்டை வைத்துள்ளவர்கள் கால்நடை மற்றும் மீன்பிடிப்பிற்கான பராமரிப்பு செலவுகளுக்கான கடன் தொகையை வரம்பில் சேர்ப்பதற்காக வங்கிக் கிளையை அணுகலாம். பிரதமரின் கவுரவ நிதி திட்ட விவசாயிகளுக்கு கடன் அட்டை பெறுவதற்கு இத்திட்டத்தின் இணையதளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இத்திட்ட விவசாய பயனாளிகள் ஒரு பக்கபடிவத்தில் தங்களது நிலம் மற்றும் பயிர் விவரங்கள் மற்றும் வேறு எந்த வங்கிக் கிளையிலும் கடன் அட்டைபெறவில்லை என்பதற்கான உறுதிப் பிரமாணம் சமர்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பத்தை பொது சேவை மையங்கள் மூலம் சமர்பிக்கலாம் என கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பாபநாசம் அருகே பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது