சிதம்பரம், பிப். 12: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உளவியல் துறையில் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி முகாம் நடந்தது. உளவியல் துறையின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் அஸ்கர் அலி படேல் வரவேற்புரையாற்றினார். முதல் நிகழ்வாக தன்னம்பிக்கை மற்றும் சுய ஒழுக்கம் பற்றி கடல்சார் உயிரியல் புல முதல்வர் முனைவர் ஸ்ரீநிவாசன் உரையாற்றினார். இதையடுத்து பயிற்சி மற்றும் அமர்வு இயக்குநர் முனைவர் கிருஷ்ணசாமி கால நிர்வாகம் மற்றும் இலக்கு நிர்ணயம் பற்றி பேசினார். முகாமில் முக்கிய அம்சமாக தேசிய பயிற்றுநர் முனைவர் சிவக்குமார், தற்குறிப்பு தயாரிப்பு மற்றும் நேர்காணல் திறன்கள் பற்றி விரிவான முறையில் உரையாற்றினார்.
இதன் அடுத்தகட்ட நிகழ்வாக கண்டுபிடிப்பு மற்றும் ஊக்குவித்தல் துறை தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார் முத்துசாமி, தொழில் முனைவோரின் திறமைகள் பற்றி உரையாற்றினர். மேலாண்மைத்துறை முனைவர் பிரகதீஸ்வரன், திறன் மற்றும் சமூக திறன்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். முகாமில் வேலை வாய்ப்புத்துறை முனைவர் நீலகண்டன், உளவியல் துறை முனைவர் பெருமாள் பிள்ளை, கல்வியியல் துறை கோவிந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முனைவர் நீலகண்டன் நன்றி கூறினார். முகாமில் உளவியல் துறையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.