மதுரை, பிப்.11: மதுரை கூடல்நகர்-ஆனையூர் பகுதி மக்கள் மதுரை நகருக்குள் வந்து செல்ல கூடுதல் டவுன் பஸ் வசதிகளை செய்துதர, போக்குவரத்து துறை முன்வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையின் ஒரு ஓரத்திலிருந்த கூடல்நகர், ஆனையூர் பகுதிகள் இன்று, விரிவடைந்து முக்கிய பகுதியாக மாறி வருகிறது. இப்பகுதிகளில் தற்போது ஏராளமான விரிவாக்கப் குடியிருப்புக்கள் வந்துவிட்டன. மேலும் இப்பகுதிகள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுவிட்டதால் இங்கு வசிக்கும் பல்லாயிரக்கணக்கானோர் பல்வேறு தேவைகளுக்காக தினமும் மதுரை நகர் பகுதிக்குள் வந்து செல்கின்றனர். ஆனால் போதுமான டவுன்பஸ்கள் இல்லாததால் இவர்கள், பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக கூடல்நகர், ஆனையூர் பகுதிகளிலிருந்து, அரசு மருத்துவமனை, சிம்மக்கல், அண்ணா பஸ்நிலையம், கலெக்டர் அலுவலகம் மற்றும் மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்திற்கு செல்ல மக்கள் தொகைக்கு ஏற்ப பஸ் வசதி இல்லை. மாறாக இப்பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட டீசல் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. அதுவும் ஆடு, மாடுகளை போல் மக்களை அடைத்துக்கொண்டு, அசுர வேகத்தில் இயக்கப்படுகிறது. இது போன்ற ஆட்டோக்களால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே கூடல் நகர், ஆனையூர் பகுதியில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் நலன்கருதி, இப்பகுதியில் கூடுதலாக டவுன் பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் முன்வர வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.