திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிபேட்டையை சேர்ந்தவர் யுகேந்திரன் (எ) விக்கி (28). இவர், நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் 2 பேருடன் மாட்டு மந்தை மேம்பாலத்தின் கீழே நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த திருவொற்றியூர் அண்ணாமலை நகரை சேர்ந்த கிஷோர் (25) என்பவர், விக்கி, அவரது நண்பர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விக்கி உள்பட 3 பேரும் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து, கிஷோரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதில், மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கிஷோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்கியை கைது செய்தனர். அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.