தர்மபுரி, பிப்.11: நக்சலைட் அமைப்பை சேர்ந்தவர் காளிதாஸ்(54). இவர் மீது தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம், பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சதித்திட்டம் தீட்டுதல், அரசுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக காளிதாசை க்யூ பிராஞ்ச் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த காளிதாஸ் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்குகள், தர்மபுரி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று வழக்கு விசாரணைக்காக, காளிதாசை திருச்சி போலீசார், தர்மபுரி சார்பு நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.