×

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் டிரைவருக்கு சரமாரி அடி, உதை

கிருஷ்ணகிரி, பிப்.11:கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பொக்லைன் டிரைவரை சரமாரியாக அடித்து உதைத்த தொழிலாளி மீது வழக்கு பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊத்தங்கரை அருகே உள்ள கொல்லநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர்  பரசுராமன்(42). பொக்லைன் டிரைவர். கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டி ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(25). கூலித்தொழிலாளியான இவர், தனது வீட்டை பரசுராமனுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். இந்நிலையில், தனது மனைவிக்கும், பரசுராமனுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்த கோவிந்தராஜ், பரசுராமனிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து, கடந்த 3 மாதத்திற்கு முன்பு பரசுராமனை வீட்டை காலி செய்ய வைத்தார்.  

இந்நிலையில், நேற்று முன்தினம், ராயக்கோட்டை மேம்பாலம் அருகே உள்ள ஒரு ஓட்டல் முன்பு நின்றிருந்த பரசுராமனிடம், கோவிந்தராஜ் தகராறில் ஈடுபட்டார். அப்போது, இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் அங்கிருந்த விறகு கட்டையை எடுத்து, பரசுராமனை சரமாரியாக தாக்கியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் எஸ்ஐ சிவசந்திரன் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : affair ,
× RELATED வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள்...