வேலூர், பிப்.6: வேலூர் மாநகராட்சியில் முதல்கட்ட திட்டத்தில் 6,600 பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்க ₹5.54 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 10 தவணையாக வரியோடு சேர்த்து மக்களிடம் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு சாலை, அண்ணா சாலை, தோட்டப்பாளையம், சலவன்பேட்டை, சைதாப்பேட்டை, வேலூர்- ஆரணி சாலை உள்ளிட்ட பகுதிகளில் முதல்கட்டமாக பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம், 10,200 இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில் பாதாள இணைப்பு பெறுவதற்கு பொதுமக்கள் அதற்கான செலவின தொகையினை செலுத்த வேண்டும்.
இந்த தொகையினை ஏழை மக்கள் மொத்தமாக செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாயினர். இதனை போக்க 3 தவணையாக செலுத்தலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். இதையடுத்து ஒரு சிலர் பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதில் அக்கறை காட்டினர். ஆனாலும் பெரும்பாலான மக்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மாநகராட்சி சார்பிலேயே பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குவதற்காக, ₹5.45 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் டெண்டர் எடுத்தவர்களே, இணைப்புகளை வழங்கி விடுவர். இணைப்பு பெற்ற பொதுமக்களிடமிருந்து 10 தவணையாக வரியினங்களுடன் சேர்த்து, பாதாள சாக்கடை திட்டத்திற்கு செலவிடப்பட்ட தொகை பெறப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.