×

ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் எலும்புக்கூடான நிலையில் ஆண் சடலம் மீட்பு கொலை செய்து வீச்சா? போலீஸ் விசாரணை

 

ஒடுகத்தூர், ஏப்.29: ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் எலும்புக்கூடான நிலையில் ஆண் சடலத்தை போலீசார் நேற்று மீட்டனர். அவர் கொலை செய்து வீசப்பட்டாரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி ஊராட்சிக்குட்பட்ட தாமரைக்குட்டை கிராமம் அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆடு, மாடுகள் மேய்ப்பது வழக்கம். இந்நிலையில், நேற்றும் வழக்கம்போல் ஆடு, மாடுகளை மேய்க்க சிலர் வனப்பகுதிக்குள் சென்றனர். அப்போது, அங்குள்ள முட்புதரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் அருகில் சென்று பார்த்தனர்.

அப்போது, எலும்புக்கூடான நிலையில் ஆண் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர், உடனே, வேப்பங்குப்பம் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள், இந்த விவகாரம் காட்டுத்தீ போல் பரவியதால் சடலம் கிடந்த இடத்தில் ஏராளமான மக்கள் குவிந்து விட்டனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் பொதுமக்களை அங்கிருந்து கலைந்து செல்ல செய்தனர். பின்னர், சடலம் கிடந்த இடத்தை சுற்றிலும் பார்வையிட்டனர். ஆனால், அங்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை.

இறந்த கிடந்தவருக்கு 50 வயதுக்கு மேல் இருக்கலாம். இறந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும். வெள்ளை நிற சட்டை மற்றும் வேட்டி அணிந்திருக்கிறார். அவரிடம் ₹400 பணம் இருந்தது என போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இதையடுத்து, சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து திருப்பத்தூர், ஆம்பூர், குடியாத்தம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு, அரியூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் யாரேனும் காணாமல் போயுள்ளார்களா? என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும், இறந்த கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து வனப்பகுதிக்குள் சடலத்தை வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வனப்பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் எலும்புக்கூடு மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

The post ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் எலும்புக்கூடான நிலையில் ஆண் சடலம் மீட்பு கொலை செய்து வீச்சா? போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Odugathur ,Vellore district ,Thamaraikuttai ,Serbadi panchayat ,Odugathur, ,Dinakaran ,
× RELATED வனப்பகுதியில் இறந்து கிடந்த...